ஞாயிறு, 3 மே, 2009

தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...

4,795+... தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...
[வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 09:59 பி.ப ஈழம்] [தி.வழுதி]
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.
பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -

இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -

கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.

வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.

போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.

வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.

இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.

"இலங்கை விடயத்தில் இருந்து நீங்கள் வெளியில் போய் விடுங்கள்" என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் நேரடியாகவே சொன்னதாக, எரிக் சொல்ஹெய்ம் எனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.

மேலும், அண்மையில் - தம்மால் "அதிசயம் எதனையும் நிகழ்த்த முடியாது" என்று சொன்ன எரிக் சொல்ஹெய்ம், "அமெரிக்காவோடு பேசுவேன், ஜப்பானோடு பேசுவேன், ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேசுவேன்" என்றுவிட்டு இந்தியா பற்றி வாய் திறப்பதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டார்.

ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்த நோர்வேயை, இப்போது - சிறிலங்காவை வைத்து அதிகாரபூர்வமாகவே அங்கிருந்து வெளியேற்றிவிட்டது இந்தியா.

இன்னொரு வகைளில் சொல்லப் போனால் - 'இலங்கைப் போரை நாம் தான் நடத்துகின்றோம்; வேறு யாரும் அங்கு தலையிடத் தேவையில்லை' என்று மேற்குலகிற்கு இந்தியா அரசு சொன்ன செய்தி அது.

'போரை நிறுத்து' என்று சும்மா சொன்னால் போர் நிற்காது என்பது தெரிந்திருந்தும், 'போரை நிறுத்து' என்று புலம்புகின்றது இந்த உலகு.

ஈழத் தமிழனைக் காப்பதே தன் 'கடைசிச் சாதனை' என்று வாய்ச் சவடால் விட்ட கருணாநிதியோ, தமிழனை 'அம்போ' என்று கைவிட்டுவிட்டு, தனது ஏதோ ஒரு கடைசி ஆசைக்காக காங்கிரஸ் காரர்களின் கால்களில் விழுந்து நக்கத் தொடங்கிவிட்டார்.

எல்லோருமாகச் சேர்ந்து - தமிழனின் காதிலே பூ சுற்றி, அவனின் தலையிலே இப்போது மிளகாயும் அரைக்கின்றார்கள்.

சிங்களப் படையெடுப்பை நிறுத்தி, நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்கத் திராணியற்ற உலகமோ, இப்போது - உலகத் தமிழ் செயற்பாட்டாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு - 'போருக்குப் பின்னான காலம்' என்றும் 'புலிகளுக்குப் பின்னான காலம்' என்றும் பசப்பு வார்த்தைகள் பேசத் தொடங்குகின்றது.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்த பின்னர் - ஏதோ அவர்களே இறங்கி நல்ல தீர்வு வாங்கித் தருவார்கள் என்று எம்மை நம்பவைக்கும் விதமாகப் பேசி மயக்கத் தொடங்குகின்றது உலகு.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்து போன பின்னர் யாரும் தமிழனை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது, சொல்லுகின்ற அவர்களுக்கும் கேட்கின்ற எமக்கும் தெளிவாகவே தெரியும்.

யாருடைய மயக்குதலுக்கும் நாங்கள் இனி ஆளாகத் தேவையில்லை; எல்லாம் முடிந்து போன பின்னர், கருணாநிதியின் கருணையும் எமக்குத் தேவையில்லை.

இந்த உலகத்தையே இப்போது நாங்கள் உலுக்க தொடங்கிவிட்டோம்.

சிவப்பும், மஞ்சளும், புலி பாயும் எங்கள் செங்கொடியுமாக - உலகத் தலைநகரங்களை நாங்கள் நிறைத்த பின்னர்தான், எமது செய்தி என்ன என்பதை நிதானமாகக் கேட்கின்றது உலகு.

'பயங்கரவாத'ப் பட்டம் சூட்டி - நிராகரித்து - எம்மைப் பயமுறுத்தி வைத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போயே போய் விட்டது.

உலக ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகளுக்கு நேர் முன்னால் நின்று - "விடுதலைப் புலிகள் எங்கள் சுதந்திரப் பேராளிகள்!" என்று நேரடியாகச் சொல்ல நாம் துணிந்து விட்டோம்.

"புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழர்களுக்கு எதிரான போரேதான்" என்று நாம் உரக்கச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.

புலிகளைத் தடைசெய்து விட்டு - 'பயங்கரவாதிகள்' என்று தமிழனைக் கொச்சைப்படுத்தி ஒதுக்கிய நாடுகளின் காவல்துறையும், சட்டமும் - இன்று, புலிக்கொடிகள் தாங்கி நாங்கள் லட்சக்கணக்கில் அவர்களது தெருக்களிளேயே அணிவகுக்கின்றபோது - ஒரு ஓரமாகப் பார்த்து நிற்கின்றன என்பது தான் யதார்த்தம்.

இப்படி ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பனை கூடச் செய்து பார்த்தது கிடையாது.

புலிக்கொடி பிடித்தாலோ அல்லது புலிகள் பற்றிக் கதைத்தாலோ இந்த உலகம் எம் கதையைக் கேட்காது என்று மிக அண்மைக்காலம் வரை நாமே எமக்குச் சொல்லிக்கொண்டு சும்மா கிடந்தோம்.

ஆனால், இவ்வளவு காலமும் எமது போராட்டங்களுக்குச் செவிமடுக்காத உலகு, இன்று - புலிக்கொடிகளோடு நாங்கள் வீதிகளில் இறங்கிய பின்னர் தான் எங்கள் கதையைக் கேட்கின்றது.

விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்த தொடங்கிவிட்டோம்.

இருந்தாலும் - எமக்குச் சாதகமாக உலகில் எதுவும் நடக்காதது போல எமது பார்வைக்கு இப்போது தோன்றலாம்; அதில் இப்போதைக்கு ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம்.

புலிக்கொடிகளோடு நாம் அலைந்து திரிவது தான் அதற்குக் காரணம் என்று சிலர் சொல்லப்பார்க்கின்றார்கள்; ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல.

எமக்குச் சாதகமான சூழல் வெளிப்படையக அமைவது தாமதம் ஆகுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் உள்ளன:

ஒன்று -

தங்களது தலைநகரங்களை நிறைத்துப் போராடுகின்ற தமிழரது உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள தமது 'மனிதாபிமான விழுமியங்களுக்கும்' (Humanitarian Values) -

சிறிலங்காவைத் தனது கைப்பொம்மையாக வைத்து ஆட்டுகின்ற இன்றைய இந்திய அரசுடனான தமது 'வெளியுறவுக் கொள்கை'க்கும் -

தென்னாசிய, இந்த சமுத்திர பிராந்தியத்தில் தமக்கு இருக்கின்ற 'கேந்திர நலனுக்கும்' இடையில் பின்னப்பட்டிருக்கின்ற 'இராஜதந்திர' வலையில் இந்த உலகு சிக்குண்டிருக்கின்றது.

இரண்டாவது -

அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டின் அரசாங்கம் (Government of a Sovereign State) என்ற வகையில் - தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள நிலம் மீதும், மக்கள் மீதும் தனது சக்தியையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமை சிறிலங்கா அரசிற்கு உள்ளதால், தனது அதிகார பலத்தை தனது எல்லைக்குள் மட்டும் பிரயோகிக்கும் ஒர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத 'சட்ட வலைக்குள்ளும்' இந்த உலகு சிக்குண்டுள்ளது.

எமக்குச் சாதகமான சூழல் உலகில் ஏற்படாதது போல தோன்றுவதற்கு இவை இரண்டுமே முதன்மைக் காரணிகள்; ஒரு அளவுக்கு மேல் எம்மால் எதனையும் இந்த உலகிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது.

உலகை ஆளும் இயங்கு மையம் 'மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி' நகர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் இப்போது நிலைகொள்வதாகச் செல்லப்படுகின்றது.

'ஒற்றை வல்லரசு' தகுதியை அமெரிக்கா இழந்துவர - 'பூகோள வல்லரசு' என்ற நிலைக்காக இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுவதாகவும் நோக்கப்படுகின்றது.

இவற்றுக்குப் பின்புலமாக - பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கேந்திர நலன்கள் கொண்ட - நுணுக்கமான பல காரணங்கள் இருக்கின்றன.

நடந்துவரும் இந்த உலக மாற்றத்தைப் பின்னணியாக வைத்தே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்தியாவை மீறி இப்போதைக்கு இந்த உலகம் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் இந்தப் பின்னணியை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.

2001 செப்ரெம்பருக்குப் பின்னான உலகச் சூழலைச் சரிவரக் கணிக்காமல் விடுதலைப் புலிகள் இயக்கம் விட்ட சில அரசியல் - இராஜதந்திர - இராணுவத் தவறுகளும் இன்றைய பின்னடைவு நிலைக்குக் காரணம் என்பதும் உண்மைதான்.

ஆனால், இன்று நிலைமை எப்படி இருந்தாலும், எமக்கான காலம் உலகில் கனிந்து வருகின்றது என்பது தான் உண்மை; ஆனால், அது சற்று காலதாமதம் ஆகின்றது.

அடுத்து வருகின்ற ஓரிரு மாத காலம் தான் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற காலம்.

இதுதான் உச்ச நேரம்; இந்த ஒரிரு மாத காலத்தின் ஒவ்வொரு நாளும் பெறுமதியானவை.

உலக ஓட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விடயம் எமக்குத் தெளிவாகப் புரியும்; இனத் துடைத்தழிப்புப் படுகொலைகள் உலகில் நிகழ்ந்த போது, எங்குமே அவை தடுக்கப்பட்டதில்லை.

இன அழிப்புக்கள் நிகழும் போது யாரும் அதில் தலையிடுவதுமில்லை: அவ்வாறு தலையிடாமல் இருப்பதற்கு அவரவருக்கு அவரவரது சொந்தக் காரணங்கள் உண்டு; யாரையும் இதில் குற்றம் சாட்டவும் முடியாது.

எல்லாம் முடிந்த பின்னர் தலையிட்டு - விசாரணை, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அது, இது என்று அடுக்கெடுப்பது தான் உலக வழமை.

அதுதான் - "Post Conflict Scenario"

இப்போது - எமது விடயத்திலும் - போரும் முடிந்து, இன அழிவும் முடிந்த பின்னர் - பெட்டி படுக்கைகளோடு வந்து இறங்குவதைத் தான் "போருக்குப் பின்னான காலம்" என்று பேசுகின்றார்கள்.

ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் -

முன்னைய காலங்களில் இனத்-துடைத்தழிப்புக்கு உள்ளாகிய இனங்களுக்கு இருந்திருக்காத சாதகமான புற மற்றும் அகச் சூழ்நிலைகள் எமக்கு இப்போது உள்ளன என்பது தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம்.

நான்கு விடயங்கள் முக்கியமானவை:

ஒன்று - எப்போதோ முடிந்துவிடும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மிகப் பலமாக இன்னமும் தொடரும் விடுதலைப் புலிகளின் மரபுவழி ஆயுதப் போராட்டம்.

இரண்டாவது - அனைத்துலக அரங்கில் தமிழர்கள் நடத்தும் - மிக வலிமையான - உதாசீனம் செய்து ஒதுக்கிவிட முடியாத பேரெழுச்சிப் போராட்டங்கள்.

மூன்றாவது - தமிழ்நாட்டு மக்களின் - கேள்விக்கிடமற்ற - ஏகோபித்த துணையும், உலகத் தமிழினம் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருக்கும் பலமும்.

நான்காவது - உலக வல்லரசு நிலைமாற்றங்கள், தென்னாசியாவின் வளர்ந்து வரும் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றுடன், இந்தியத் தேர்தல்.

இந்த நான்கில் முதல் இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.

இன அழிப்புப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று போராடினால் தான் உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, ஆயுதப் போராட்டம் உச்சமாக நிகழ்கின்ற போது முன்வைத்தால்தான் எமது அரசியல் கோரிக்கைகளும் எடுபடும் என்பதும் அதே அளவுக்கு உண்மை.

இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் போராடினால், சில சமயம் இன அழிப்பைத் தடுக்க முடியாமலே கூட போய்விடலாம்; ஆனால், தெளிவான அரசியல் கோரிக்கையையும் முன்வைத்துப் போராடினால் - இன அழிவையும் தடுத்து, அரசியல் உரிமைகளையும் பெற்றுவிடும் சாதகச் சூழல் எமக்கு கனிந்து வருகின்றது.

எனவே - இன அழிப்பைத் தடுக்கும் படி போராடி உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈர்க்கப்பட்ட அந்தக் கவனத்தின் முன்னால் எமது தெளிவான அரசியல் போரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டும்.

அதற்கு இது தான் மிகச் சரியான நேரம்.

அடிப்படையான எமது அரசியற் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.

அந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது; ஏனெனில், அவை இரண்டுமே, மேற்குலகு போற்றும் 'ஜனநாயக' வழிமுறைகளினூடாகத் தமிழர்களால் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட விடயங்கள்.

ஒன்று - 'தமிழீழத் தனியரசே எமக்கான தீர்வு': 1977 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தத் தீர்வுக்கு வக்களித்து, நாம் அதனைத் தெளிவாகச் சொல்லியாகிவிட்டது. அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை; தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க இனி ஒரு பொதுவாக்கெடுப்பும் (Referendum) தேவையில்லை.

இரண்டாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே எமது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் (Authentic representatives): 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அங்கீகாரத்திற்கு வாக்களித்து, விடுதலைப் புலிகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த மாற்றத்திற்கும் இனி இடமில்லை.

இந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைளையும் இந்த உலகம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விதமான புறச்சூழல் நிச்சயமாக ஏற்படும்.

- 'புலிகள் எங்கள் சுதந்திரப் போராளிகள்' என்பதை இந்த உலகத்தின் செவிப்பறை கிழிய நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க -

- சிங்களப் படைகளின் முன்னேற்றங்களுக்கு எதிராகப் புலிகள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க -

- காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ள -

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்றபோது - எமக்கான ஒருநாள் நல்லவிதமாக விடிந்தே ஆகும்.

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்ற போது - இந்த உலகம் எமது குரலைக் கேட்டுத்தான் ஆகும்; எமக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துத்தான் ஆகும்.

வன்னிப் போரைப் புலிகளும், இந்தியத் தேர்தலை எம் தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக்கொள்ள - எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

சிலையாய் நிற்கின்ற நேரு மாமாவின் தலையை உடைத்து, சும்மா கிடக்கின்ற சிறிலங்கா தூதரகத்தை நொருக்கி - எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.

ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.

எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....

படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;

எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;

தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதி பிரிகேடியர் தீபனின் புதைகுழியின் மேலே கைகளை வைத்து!

தி.வழுதி

சிறிலங்காவுக்கு பணம் கொடுக்காதீர்கள்: அகாசியிடம் த.தே.கூ. வலியுறுத்தல்

[ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2009, 09:15 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
வன்னிப்பெரு நிலப்பரப்பை இராணுவ பிரதேசமாக்கி தமிழர் தாயக கோட்பாட்டை நில ரீதியாக பிளவுபடுத்தி தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டும் சிறிலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதி வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், கனகசபை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இச்சந்திப்பு மிகவும் காரசாரமான விவாதங்களுடன் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியுடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது:

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜப்பான் மகிந்த அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ள 480 மில்லியன் நிதி போருக்கே செலவிடப்படும். ஆகவே, சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகளை ஏற்று தமிழின அழிப்பு போருக்கு ஜப்பான் உதவி அளிக்கக்கூடாது.

வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயா்ந்த மக்களை ஐந்து வருடங்களுக்கு நிரந்தரமாக அப்படியே வைத்திருப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து 150 மைல்களுக்கு அப்பால் உள்ள காடுகளை அழித்து நிரந்தரமாக கொட்டில்களை அமைத்து அங்கு இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தி அடிமைகளாக வைத்திருக்க முற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஜப்பான் நிதி வழங்குகின்றமை வேதனைக்குரியது.

இந்த மக்கள் வன்னியில் சொந்த நிலபுலங்களுடன் வாழ்ந்தவர்கள்; தொழில் புரிந்தவர்கள். மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தினாலே போதும்.

அவர்கள் தாங்களாகவே உழைத்து வாழ்வார்கள். மக்களிடம் மாடுகள் பண்ணைகள் உண்டு. நீங்கள் நிதி கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

ஆனால், போரினால் அவர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளன; தேசமடைந்துள்ளன. அவற்றைத் திருத்துவதற்கு நிதி வழங்கி நட்ட ஈட்டையும் வழங்குங்கள் என விளக்கி கூறியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதேவேளையில் இதற்கு பதிலளித்த யசூசி அகாசி, சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டது. அத்துடன், இடம்பெயர்ந்தவர்கள் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று மகிந்த அரசாங்கம் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக கூறியிருக்கின்றார்.

யசூசி அகாசி, அவ்வாறு கூறியதை மறுத்துரைத்த இரா.சம்பந்தன், சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயகம் பற்றி எங்களுக்கு ஜப்பான் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சிறிலங்காவின் ஜனநாயகம் பற்றி யசூசி அகாசி கூறிய விடயம் தொடர்பில் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

லசந்த விக்கிரமதுங்க உட்பட இதுவரை 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.

அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்களும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினரும் இக்கொலைகளை செய்துள்ளனர். வேறு யாரும் அல்ல. அதற்கான ஆதாரங்களை கூட்டமைப்பினராகிய நாங்கள் அரச தலைவரிடம் நேரடியாக கையளித்தும் இன்னமும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் 1948 ஆம் ஆண்டில் இருந்து பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை

கனரக ஆயுதங்களை பாவிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழியைக்கூட சிறிலங்கா அரசாங்கம் இன்று மீறியுள்ளது.

உத்தரவாதங்களை சிறிலங்கா அரசாங்கம் தாராளமாக வழங்கும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த உறுதிமொழிகள் அனைத்தும் வெற்றுக் காகிதங்கள்தான்.

முள்ளிவாய்க்காலில் இயங்கிவந்த தற்காலிக மருத்துவமனை கூட இன்று (நேற்று) படையினரின் எறிகணைத்தாக்குதலுக்கு உள்ளாகி 64 நோயாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயகம் என்று சம்பந்தன் இடித்துரைத்தார்

அதேவேளையில் ஜப்பான் போன்ற அனைத்துலக நாடுகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக உதவிபுரிவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும என்று சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இரண்டாம் உலக போரின்போது ஜப்பான் கிரோசிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அணுக்குண்டுகள் வீசப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அவலமும் அதன் தாக்கம் இன்றுவரை நீடிப்பதும் ஜப்பானுக்கு புரியும்.

இந்நிலையில் போரில் தமிழ் மக்கள் படும் அவலங்கள், வேதனைகள் பற்றி உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என காரசாரமாக எடுத்து விளக்கியதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இச்சந்திப்பு கடுமையான வாக்குவாதத்துடன் இடம்பெற்றமையினால் எதிர்வரும் காலங்களில் யசூசி அகாசி கொழும்புக்கு வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்காது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 23 மார்ச், 2009

தேசியத் தலைவர் பிரபாகரனின் எண்ணக்கதிர்

தேசியத் தலைவர் பிரபாகரனின் எண்ணக்கதிர்

பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளாற்
சிங்கள இனம்
வழிதவறிச்சென்று
தொடர்ந்தும் பேரினவாதச்
சகதிக்குள் வீழ்ந்துகிடக்கிறது.

13 சதுர கி.மீ. பரப்பளவில் 150,000 மக்கள்; வாராந்தம் 300 பேர் படுகொலை:

13 சதுர கி.மீ. பரப்பளவில் 150,000 மக்கள்; வாராந்தம் 300 பேர் படுகொலை:

'த ரைம்ஸ்' நாளிதழ்

[திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 07:03 மு.ப ஈழம்] [பி.கெளரி]

வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்; வாராந்தம் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' இதழுக்காக எழுதிய கட்டுரையில் ஊடகவியலாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அவையவங்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். 26 வருடப் போரில் தற்போது அதிக பாதிப்புக்களை சந்தித்து வரும் மக்கள் இவர்கள்.

கடந்த வாரம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த 460 மக்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றிருந்தது. உள்ளூர் மீனவர்களின் துணையுடன் மரத்திலான டிங்கி படகுகளில் கொண்டு செல்லப்பட்ட இந்த மக்கள் 'கிறீன் ஓசின்' கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதிகளவான மக்கள் காயமடைகின்ற போதும் எடுத்துச் செல்லப்படும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவானது எனவே நாம் படுகாயமடைந்தவர்களையே அகற்றி வருகின்றோம்.

ஏனைய காயமடைந்த மக்களை அங்கேயே விட்டுள்ளோம். இது வேதனையானது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி சோபி றோமனின்ஸ் தெரிவித்துள்ளார்.

படை நடவடிக்கை காரணமாக 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள பகுதிகளில் 150,000 மக்கள் தங்கியுள்ளனர். அங்கு நடைபெறும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களினால் ஒவ்வொரு வாரமும் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் மருந்து, உணவு, குடிநீர் பற்றாக்குறை காரணமாகவும் இறப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

வன்னியில் இயங்கிவந்த கடைசி மருத்துவமனையும் சிறிலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இருமுறை உட்பட்டதனால் மூடப்பட்டுள்ளது.

புதுமாத்தளனில் உள்ள சிறிய மருத்துவமனையே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நோயாளர்கள் நிலத்தில் நீர் உட்புகாத துணிகளில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மருந்து பொருட்களிளின் பாவனைக்கு மரத்தின் கிளைகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து 2,800 மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் எமக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயார் எனவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுக்கள் ஒரு இன அழிப்பு நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தடுத்து வருவதுடன் தொடர்ச்சியாக வான்குண்டு மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இது வன்னியில் பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துலக கண்காணிப்பாளர்கள் வன்னிக்கு வந்து நிலமைகளை கண்காணிக்க வேண்டும் என நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணி நேரத்தில் பதில் கூறாது விட்டால் சிறிலங்காவை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிறவுன் நீக்க வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றயன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு கண்டனம்

ஐ.நா. மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு கண்டனம்

[ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 07:54 பி.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்]

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத்தொடரில் சிறிலங்கா பல நாடுகளினால் கண்டிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
இதேவேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பலவிதப்பட்ட அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்டனத்திற்கும் சிறிலங்கா ஆளாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பிரதான கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்திற்குள் அனைத்துலக அரச சார்பற்ற வேறு நிறுவனங்களின் கூட்டங்களும் நடைபெறுகின்றன.




இவற்றில் குறிப்பாக கடந்த திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் அல்காக நிறுவனம், ஹிமாலயன் கலாச்சார நிறுவனம், அனைத்துலக சர்வ நம்பிக்கை ஆகிய அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களினால் இரு முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இக்கூட்டங்களில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமும் மனித பாதுகாப்பும்', 'தென் ஆசியாவில் மக்களின் கூட்டாச்சியை நோக்கி' போன்ற தலைப்புக்களில் விவாதங்கள் இடம்பெற்றன.

கூட்டங்களில் பல அனைத்துலக மனித உரிமையாளார்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள், ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்து உரையாற்றியிருந்தனர்.




இதில் மனித உரிமை மீறல், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் வேறுபட்ட விவாதங்களுடன் ஆராயப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் மிக நீண்டகால அங்கத்தவரும், தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளருமான ச.வி.கிருபாகரனும் உரையாற்றியிருந்தார்.

அத்துடன் பிரபல அரசியல் ஆய்வாளரும் இளைப்பாறிய சிவில் நிர்வாகியுமான வன்னித்தம்பி கனகரட்னம் மூத்த ஊடகவியலாளர் கனகரவி, எஸ்.ஜே.இமானுவேல் அடிகளாருடன் வேறு பல தமிழ்ப் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்

[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2009, 01:50.15 AM GMT +05:30 ]

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார் கருணாநிதி என்று குற்றம் சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக ராமதாஸ் அவர்கள் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.

அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.
வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையைத் தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ""இலங்கை ஓர் இறையாண்மை மிக்க நாடு, அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது'' என்ற ரீதியில் தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், முதல்வரும் கை கழுவி விட்டனர் என்பதையே முதல்வர் கருணாநிதியின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.
இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை தில்லியில்தான் இருந்தது.

இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பதில், அந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு மக்களையும், பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அடங்கி இருக்கிறது.

இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது. ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று சந்தேகப்படும்போது, இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால் அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டுப் பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால், ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருக்கிறது.

ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவையெல்லாம், இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான். அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை.

ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது. அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும்.

அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும், முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும்.

போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; இந்தியா எம்மோடு இருக்க வேண்டும்: பா.நடேசன்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 04:50.41 PM GMT +05:30 ]

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது; இந்தியா எமக்கு அருகில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என் ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு

பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

முதலில், 'சிக்கியுள்ள மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது முறையானது அல்ல. இது அவர்களின் நிலம் அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். சிறிலங்கா அரசு அந்த மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தும் வரை அங்கு மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்கள் 'சிக்கியுள்ள மக்கள்' அல்ல. தமது பழைய வாழ்க்கையை மீண்டும் பெற்றுக்கொள்ள அவர்கள் போராடி முயற்சித்து வருகின்றனர்.

பிரபாகரன் இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

நீங்கள் தெரிவித்ததை போல அவை வதந்திகள் தான். தலைவர் இங்கு எமது மக்களுடன் தான் வாழ்கின்றார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

தற்போதைய சிக்கலில் இந்தியாவின் நிலைப்பாட்டை விடுதலைப் புலிகளால் மாற்ற முடியுமா? இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் எப்போதும் செயற்பட்டதில்லை, அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது. இந்தியாவின் தென்முனையினது பாதுகாப்பு, தமிழீழ மக்களின் அரசியல் நல்வாழ்வோடும் பாதுகாப்போடும் தான் பின்னிப் பிணைந்துள்ளது.

இந்திய அரசின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் விரும்புவாரா?

நிபந்தனைகள் அற்றதும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வை கொண்டதுமான பேச்சுக்களில் ஈடுபட நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

இந்த பிராந்தியத்தின் வலிமை மிக்க நாடு இந்தியா. அது எங்களின் நண்பன். இந்தியா எப்போதும் எமது பக்கத்தில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி வருவதாக விடுதலைப் புலிகள் கருதுகின்றார்களா?

உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக எல்லாக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பது உண்டு. ஆனால், அவை தொடர்பாக நான் கருத்துக் கூறுவது பொருத்தமானதாக இருக்காது. இருந்த போதும் ஈழத் தமிழ் மக்களுக்காக எல்லா தமிழக மக்களும் ஒன்றிணைந்து இருப்பது தமிழீழ மக்களுக்கு மகிழ்வைத் தருகின்றது.

இன்று ஈழத் தமிழ் மக்களின் பலமாக இருப்பது தமிழக மக்களினதும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் ஆதரவுகள் தான் என்றார் பா.நடேசன்.